Sunday, May 1, 2011

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி: கடந்த 4 ஆண்டில் அதிகரிப்பு


நாட்டின் கிராம பகுதி மக்கள் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

"இந்திய ஊழல் ஆய்வு 2010' என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா,
சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் நடத்திய இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் கூறப்பட்ட தகவல்:நாட்டில் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கிராமப்புற மக்கள், கடந்தாண்டில் மட்டும் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளனர். சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து வழங்கப்பட் லஞ்சம் 164 ரூபாய். அசாம், குஜராத், கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு 2010 - 2011ம் ஆண்டில், செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த 471 கோடியே 80 லட்சம் ரூபாய் அதற்கு சமமானது என்று கூறலாம்.அதிகபட்சமாக பொதுப் பணித்துறைக்கு 11.5 சதவீதம், மருத்துவமனைக்கு 9 சதவீதம், பள்ளிக்கு 5.8 சதவீதம், தண்ணீருக்கு 4.3 சதவீதம் லஞ்சம் கொடுத்துள்ளனர். சமூக, பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் தான் அதிகளவில் இந்த லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், பொதுப் பணித்துறையில் லஞ்சம் அதிகரித்து விட்டதாக தெரிவித்தனர்.மாத வருமானம் 5,000 ரூபாய் அல்லது அதற்கு கீழ் பெறுபவர்களில் நான்கில், மூவர் இதுபோன்ற அடிப்படை வசதிகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. இவர்கள் பெரும்பாலும், அரசின் சலுகைகள் பெற்று வாழும் ஏழைகள்.

அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதற்கு முறையான அட்டை பெற, ஒரு ரூபாய், இரண்டு ரூபாயும், எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதிக்க தனியாக அதிக அளவு லஞ்சம் கொடுத்துள்ளனர்.ரேஷன் கார்டு விண்ணப்பம் பெற ஐந்து ரூபாயும், எந்த ஆவணங்களும் இல்லாமல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கார்டு பெற 800 ரூபாயும் லஞ்சம் கொடுத்துள்ளனர்.முறையான தண்ணீர் இணைப்பிற்கு, பல்வேறு வகையான சேவைகளுக்கு 15 முதல் 950 ரூபாய் வரை லஞ்சமாக கிராம மக்கள் வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட இதுபோன்று லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.இப்படிவழங்கபட்ட லஞ்சத்தில், பொதுப்பணித் துறைக்கு 156 கோடியே 80 லட்சம் ரூபாயும், தண்ணீர் இணைப்பு மற்றும் சேவை பணிகளுக்கு 83 கோடியே 30 லட்சம் ரூபாயும், மருத்துவமனை சேவை பெற 130 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2005ம் ஆண்டில் இருந்து லஞ்சம் தருவது நான்கு மடங்கு அதிகரித்து காட்டப்பட்டுள்ளன.

* லஞ்ச பட்டியலில் சத்திஸ்கர், பீகார் மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன. பொதுப்பணித்துறையில் லஞ்சம் அதிகரித்து விட்டதாக, இம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
* பீகாரில், கடந்த 2005ம் ஆண்டில், ஊழல் இருப்பதாக 87 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது, நடப்பாண்டில் 66 சதவீதமாக குறைந்துள்ளது.
* இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஊழல் அதிகரித்து இருக்கிறது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் அருணா ராய் கூறுகையில், "ஊழலை எதிர்த்து ஏழைகள் போராடுகின்றனர். அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கு லஞ்சத்தை கொடுத்துள்ளனர். இவர்கள் சார்பில் போராட முன்வர வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment