Sunday, February 27, 2011

முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்




சென்னை, பிப். 27: 2ஜி அலைக்கற்றை ஊழல் புகாரில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உள்ளதாகக் கருதப்படும் தொடர்பை விசாரிக்க வசதியாக அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"2-ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வை உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. மூலம் நேரடியாகக் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. அதன்படியே அவ்வப்பொழுது புலனாய்வின் நிலவரம் குறித்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது.
எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விட்டுவிடக் கூடாது என்று கடந்த 10-ம் தேதி சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2-ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்றும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த "எஸ்டெல்' நிறுவனம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கலைஞர் டி.வி.யின் உரிமையாளராக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், சரத்குமார் என்பவருக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளதாகத் தெரியவருகிறது.
சரத்குமார் எஸ்டெல் நிறுவனத்திலும் சில காலம் இயக்குநராக இருந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு அதிக வருமானம் தரும் எந்தத் தொழில்களும் இல்லை. முதல்வரின் நேரடி உறவினர்கள் என்பதாலேயே பெரும் தொகை கடனாகத் தரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் முதல்வர் கருணாநிதிக்கும் பொருந்தும்.
தமிழகத்தின் முதல்வராக இருப்பதாலும், மத்திய அரசில் கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. அங்கம் வகிப்பதாலும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை முறையாக நடைபெறாமல் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2-ஜி அலைக்கற்றை தொடர்பான விசாரணைக்கு ராசா அமைச்சர் பதவியில் இருந்தால் குந்தகம் ஏற்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியதன்பேரில் அவர் பதவி விலகினார். அதே போல தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி தொடர்ந்தால் முறையான விசாரணை நடைபெறாமல், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படக்கூடும்.
எனவே முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும். பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.
தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை.
இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் கையாண்ட வழிவகைகளை அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்

No comments:

Post a Comment