Wednesday, April 20, 2011

2ஜி ஊழல்-5 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் கைது

2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 5 அதிகாரிகள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இதையடுத்து இந்த
5 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, டிபி ரியாலிட்டி அதிபர் பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் பொகுரியா, சந்தோலியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தைச் சேர்ந்த கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர், ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு பிரிவு) நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து கைதாவதிலிருந்து தப்ப அவர்கள் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமீன் மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, அவர்கள் தலைமறைவாகக் கூடும் என்பதால் அவர்களைக் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஜாமீன் வழங்கப்பட்டால் 5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியது.
  Read:  In English 
இதையடுத்து தாங்கள் சிபிஐயின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், ஜாமீன் அளிக்கப்பட்டால் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவோம் என்றும் இந்த 5 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த 5 பேரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment