Saturday, April 16, 2011

தேமுதிகவினர் மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்






 தேமுதிக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினரின் சமூக விரோதச் செயல்கள் முடிந்தபாடில்லை. நமது கூட்டணிக் கட்சியினரை தொடர்ந்து தி.மு.கவினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரசன்னகுமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.மு.கவைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரத் தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.கவினர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

வேடசந்தூர் தொகுதியில் உள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.கவினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க. கிளைச் செயலர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா வீட்டிலிருந்தபோது தி.மு.கவைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினரின் வன்முறை தொடர்ந்து வருகிறது.

வருகிற மே மாதம் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இப்பொழுதே இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டால் எத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை யாரும் யூகிக்க முடியாது. இத்தகைய வன்முறையாளர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே விளைவுகளை தவிர்க்க முடியும்.

தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட தேமுதிக தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறித் தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க.வில் உள்ள கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

காபந்து அரசாக இருக்கின்ற பொழுதே தி.மு.கவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்குமிடத்து, இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. குண்டர்களை உடனடியாக கூண்டில் அடைக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறும் என்பதால், காலாவதியாகி விட்ட முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு கருணாநிதி குறை சொல்கிறார் என்பதை பொருட்படுத்தாமல், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment