Sunday, May 22, 2011

தேர்தலில் ஜாதி கட்சிகளுக்கு பெரும் அடி : மக்கள் புறக்கணித்து "பாடம்'

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க., உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழக வாக்காளர்கள் ஜாதிக் கட்சிகளுக்கு, மரண அடி கொடுத்து, பாடம் புகட்டி உள்ளனர்.

தமிழகத்தில் வன்னியர் சங்கமாக துவக்கப்பட்டு, பின் அரசியல் கட்சியாக பா.ம.க., உருவெடுத்தது. ஆரம்ப கட்டத்தில் சுயேச்சையாக நின்று, அதிகபட்சம் நான்கு தொகுதிகள்

வரை வெற்றி பெற்று, தங்களது பலத்தை நிரூபித்தனர். அதன் பின் கட்சித் தலைவர் ராமதாஸ், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஒவ்வொரு தேர்தலின் போதும், கூட்டணியை மாற்றிக் கொண்டே வந்தார்.இதன் பலனாக கடந்த தேர்தலில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வந்தது. தன் மகனை மத்திய அமைச்சராக்கியது, பல வன்னியர் சங்க பிரமுகர்களுக்கு "கல்தா' வழங்கியது உள்ளிட்ட பல புகார்களால், பா.ம.க., சிறிது சிறிதாக வன்னியர் சமுதாய மக்களிடையே செல்வாக்கையும் இழந்து வந்தது. இதை, 2009 லோக்சபா தேர்தலின் போது தெளிவாக பார்க்க முடிந்தது. இதனால், பா.ம.க.,வை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்க்க தயக்கம் காட்டும் நிலை உருவானது.

இருப்பினும், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், செஞ்சி ஆகிய மூன்று தொகுதிகள் மட்டுமே பா.ம.க.,வுக்கு கிடைத்தது. பா.ம.க., கோட்டை என, வர்ணிக்கப்பட்ட சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு இடங்களை கூட கைப்பற்றாததும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தோல்வியடைந்ததும், கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக வன்னிய இளைஞர்கள் ஜாதி அரசியலை விரும்பவில்லை என்பதையும், மற்ற ஜாதி மக்களும், பா.ம.க.,வை விரும்பவில்லை என்பதையும், தேர்தல் மூலம் பா.ம.க.,வுக்கு பாடம் நடத்தியுள்ளனர். இதேபோல், தலித் மக்கள் சங்கத்தை மையமாக வைத்து உருவான விடுதலைச் சிறுத்தை கட்சியும், இத்தேர்தலில், பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

இவற்றில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இதன் மூலம் இக்கட்சியின் செல்வாக்கிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த தேர்தல் வரை வெவ்வேறு அணியில் போட்டியிட்ட பா.ம.க.,வும், வி.சி., கட்சியும் இந்த முறை தி.மு.க., கூட்டணியில் இருந்தனர். தலைவர்கள் இக்கூட்டணியை ஏற்றுக்கொண்டாலும், இரு கட்சியை சேர்ந்த ஜாதி தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. மேலும் இரு கட்சியின் தலைவர்கள் இந்த ஜாதிகள் இணைந்து புரட்சி படைக்கும் என்று ஆரவாரம் செய்தனர். முடிவில் விடுதலைக்கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.கொங்கு வேளாளர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து துவக்கப்பட்ட, கொங்கு முன்னேற்ற கழகம் கட்சிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 12 இடங்களில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுகளை பெற்ற, கொ.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில் பெருந்துறை, கோபி, நாமக்கல், பல்லடம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சூளூர் ஆகிய ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. கட்சி தொண்டர்களின் உணர்வை மதிக்காமல், கட்சித் தலைமை தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. இத்தேர்தலில், ஜாதி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு சாவு மணி அடித்ததின் மூலம், தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது என்று தமிழக வாக்காளர்களிடம் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.அ.தி.மு.க., அணியிலும் ஜாதி கட்சிகள் : அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி ஆகிய ஜாதிக் கட்சிகளில், அகில இந்திய மூவேந்தர் முன்னணி தோல்வியடைந்துள்ளது. மற்ற ஜாதிக் கட்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள் தங்கள் ஜாதி ஓட்டுகளால் வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இவர்களும் தனித்தோ அல்லது பிற அணியில் போட்டியிட்டிருந்தால், பா.ம.க., - வி.சி.,க்களுக்கு ஏற்பட்ட நிலை தான் இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment