Thursday, August 16, 2012

கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு?


தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.

1 comment:

  1. ...ம்... இன்னும் என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete