Monday, September 3, 2012

4 பேரை மட்டுமே மணந்தேன்... ஷானாஸ் பரபரப்பு


 நான் இதுவரை சினிமா உதவி இயக்குநர் ராகுல் உள்பட 4 பேரை மட்டுமே மணந்துள்ளேன். 50 பேரைத் திருமணம் செய்தேன் என்பதில் உண்மை இல்லை. என் மீது பழிவாங்கும் நோக்குடன் புகார்கள் கொடுத்துள்ளனர் என்று போலீஸில் பிடிபட்டுள்ள திருமண மோசடிப் பெண் ஷானாஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஷானாஸ். இவர் மோசடியாக 50 திருமணங்களைச் செய்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது புளியந்தோப்பு பிரசன்னா, மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட பலர் போலீஸில் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து ஷானாஸ் தலைமறைவானார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில், பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே சுற்றிக் கொண்டிருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு பிடிபட்ட ஷானாஸ் இன்று அதிகாலையில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அதிகாலை முதல் முற்பகல் 11 மணி வரை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஷானாஸ் போலீஸ் விசாரணையின்போது பரபரப்புத் தகவல்களைக் கூறியதாக தெரிகிறது. அதுகுறித்த விவரம்...
10வது படித்தபோது முதல் திருமணம்
ஷானாஸின் தாயார், ஷானாஸின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஷானாஸ் 10வது படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் ஷானாஸின் தந்தை இறந்து விட்டார். இதையடுத்து ஷானாஸ், சி்த்திக்கைப் பிரிந்தார். அதன் பின்னர் நாளிதழில் வந்த விளம்பரம் ஒன்றைப் பார்த்த அவர் சென்னைக்கு வந்தார். அங்கு கீழ்ப்பாக்கத்தில் நசிமுதீன் என்பவர் நடத்தி வரும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதன் பின்னர் அவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்தார். 2வது கணவருடன் பின்னர் திருச்சிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சில மாத குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர் ராகுலைப் பிரிந்து மீண்டும் சென்னைக்கு வந்து மறுபடியும் அதே ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் விலகினார். வேளச்சேரியில் தங்கிய அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்குப் பல ஆண்களின் தொடர்பு கிடைத்ததாக தெரிகிறது. அதன் மூலம் பலரை மோசடியாக அவர் தனது வலையில் வீழ்த்தியதாக தெரிகிறது.
போலீஸாரிடம் ஷானாஸ் கூறுகையில், சித்திக், பிரசன்னா உள்பட 4 பேரை மட்டுமே மணந்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற புகார்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரை மேற்கொண்டு விசாரிக்கும்போது மேலும் பல தகவல்களைப் பெற முடியும் என போலீஸார் நம்புகின்றனர். இதனால் நாளை அவரை போலீஸ் காவலில் அனுப்புமாறு கோரி மனு செய்யவுள்ளனர்.
கர்ப்பமாக இருக்கிறாரா?
ஷானாஸ் கடைசியாக குடும்பம் நடத்திய நபர் புளியந்தோப்பு பிரசன்னாதான். அவரிடம்தான் வேலூர் போவதாக கூறி விட்டு தலைமறைவானார் ஷானாஸ். அதற்குப் பிறகு அவர் வரவில்லை.
பிரசன்னாவும், ஷானாஸும் 3 மாதம் ஒன்றாக குடும்பம் நடத்தியுள்ளனர். தற்போது ஷானாஸ் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment