Tuesday, October 26, 2010

பால் ஆக்டோபஸ் மரணம்

 
பெர்லின்: உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, ஜெர்மனி விளையாடிய போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக ஆருடம் கூறி, ரசிகர்களின் அன்பைப் பெற்ற, ஆக்டோபஸ் "பால்' நேற்று மரணம் அடைந்தது.

ஜெர்மனி கடல் வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் இருந்து வந்தது "பால்' என்ற ஆக்டோபஸ். இது கடந்த 2008 ஜனவரியில் இங்கிலாந்தில் பிறந்தது. இதை வைத்து கால்பந்து போட்டிகளின் முடிவுகளை முன்னதாகவே கணித்து வந்தனர். அதாவது போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கோடியுடன், இதற்கான உணவும் அடங்கிய இரண்டு பெட்டிகள், பெரிய பிளாஸ்டிக் பெட்டிக்குள் வைக்கப்படும். ஆக்டோபஸ் எந்த பெட்டியின் மீது அமருகின்றதோ, அந்த அணி போட்டியில் வெல்லும் என நம்பினர்.

துல்லியமான கணிப்பு:கடந்த பிபா உலக கோப்பை தொடரில், பால் ஆக்டோபஸ் கணித்த முடிவுகள் 100 சதவீதம் சரியாக இருந்தது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் அனைத்து முடிவுகளும் ஆக்டோபசின் கணிப்புபடி சரியாக இருந்தது. பைனலில் ஸ்பெயின் கோப்பை வெல்லும் என்று சொன்னதும், அப்படியே நடந்தது. இதையடுத்து ஸ்பெயினில் இதற்கு ஆதரவு பெருகியது. இதை எப்படியும் ஸ்பெயினுக்கு கொண்டு செல்ல நூற்றுக்கும் அதிகமானோர் முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி மறுத்துவிட்டது.
கடந்த 2008ல் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் போது, ஜெர்மனி விளையாடிய அனைத்து போட்டிகளின் முடிவையும், பால் முன்னதாகவே சரியாக கணித்தது. ஆனால் குரோஷியாவுக்கு எதிரான லீக் மற்றும் பைனலில் ஸ்பெயினுக்கு எதிராக ஜெர்மனி வெல்லும் என கணித்தது பொய்யானது.

உலக கோப்பை தொடருக்குப் பின் கடந்த ஜூலை 12 முதல், இதுபோல ஆருடம் சொல்வதில் இருந்து, பால் ஓய்வுபெற்று விட்டதாக இதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இதன் செய்தித்தொடர்பாளர் தன்ஜா முன்ஜிக் அப்போது கூறுகையில்,"" கால்பந்து, அரசியல், பொருளாதாரம் என எதைக்குறித்தும், பால் இனிமேல் ஆருடம் சொல்லாது. இனிமேல் சிறுவர்களை மகிழ்விக்கும் வேலையை மட்டும் செய்யும்,'' என்றார். தவிர, 2018 ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த முயற்சிக்கும் இங்கிலாந்தின் தூதராக பால் ஆக்டோபஸ் நியமிக்கப்பட்டது.

இயற்கை மரணம்:இதனிடையே பால் ஆக்டோபஸ், நேற்று மரணம் அடைந்தது. இதுகுறித்து ஜெர்மனியின் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தின் மானேஜர் ஸ்டெபான் பார்வொல் கூறுகையில்,"" பால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவு நன்றாக இருந்தது. பின் நேற்று காலையில் பார்த்த போது இறந்து கிடந்தது. தூங்கிக் கொண்டிருந்த போது, பால் இயற்கை மரணம் அடைந்ததுள்ளது. இதை எங்கு அடக்கம் செய்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment