Saturday, October 30, 2010

கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு... சச்சினிடம் பிராட்மேன்





லண்டன், அக்.30: கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு, இதில் எப்போதும் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பிராட்மேன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 கிரிக்கெட்டின் பிதாமகராக கருதப்படுவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டான் பிராட்மேன். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,996 ரன்கள் குவித்துள்ளார். இதில் 29 சதங்கள், 50 அரை சதங்கள் அடங்கும். சராசரி 99.94 ரன்கள்.
 பிராட்மேன் கடந்த 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் காலமானார்.
 கிரிக்கெட்டில் தனது நகலாக சச்சினை அடிக்கடி குறிப்பிட்டவர் பிராட்மேன். முன்னதாக, தனது 90-வது பிறந்த நாள் விழாவுக்கு சச்சின் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை விருந்தினர்களாக அவர் அழைத்திருந்தார்.
 அந்த சந்திப்பின்போது பிராட்மேனுடனான தனது இனிய தருணங்கள் குறித்தும், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகைக்கு சச்சின் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில வரிகள்...
 ""அவரிடம் (பிராட்மேன்) நீங்கள் இப்போது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தால் எவ்வளவு சராசரி வைத்திருப்பீர்கள் என்று நான் கேட்டேன். பிராட்மேன் 70 ரன் சராசரி வைத்திருப்பேன் என்று கூறினார்.
 உடனே, நான் 99 சராசரி வைத்துள்ள நீங்கள் இப்போது 70 ரன்களாக குறைத்துக் கூற காரணம் என்ன என்று வினவினேன். அதற்கு அவர் 90 வயதுள்ள நான் 70 ரன் சராசரி வைத்திருப்பதே பெரிய விஷயம் என்று நகைச்சுவையாக கூறினார்.
 நீ 11 வயது சிறுவனாக இருந்தாலும்சரி அல்லது டான் பிராட்மேனாக இருந்தாலும் சரி ஒன்றை மட்டும் எப்போதும் மறக்கக்கூடாது. கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு, இதில் எப்போதும் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்'' என்று பிராட்மேன் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் சச்சின்.
 குரோனியேதான் அதிகம் சோதித்தவர்: தென் ஆப்பிரிக்க வீரர் ஹான்ஸி குரோனியேவின் பந்து வீச்சை எதிர்கொண்டதுதான் மிகவும் சவாலாக இருந்தது என்றார் சச்சின். டொனால்டு, ஷான் போலாக் ஆகியோர் என்னை அதிக அளவில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
 எனினும், குரோனியே பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என பல சமயங்களில் நான் ஸ்தம்பித்தது உண்டு. என்னை நெருக்கடிக்குள்ளாக்கிய சிறந்த பந்து வீச்சாளர் அவர்.
 மெக்ராத்தின் வேகப்பந்து வீச்சும், ஷேன் வார்னேவின் விஷேசமான சுழற் பந்து வீச்சும் என்றும் மறக்க முடியாதவை. டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், பேட்டிங்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கிறேன்.
 ஆஸ்திரேலிய அணி பற்றி குறிப்பிடுகையில், "கில்கிறிஸ்ட், ஹேடன், ஜஸ்டின் லாங்கர், வார்னே ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பலவீனம்தான். இப்போதும் சிறந்த வீரர்களை அந்த அணி பெற்றிருந்தாலும், பாண்டிங் ஒருவரே அந்த அணியின் பேட்டிங் பலம். எதிர்வரும் ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
 அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலும் நடக்க உள்ளன. சமீபகாலமாக இந்திய வீரர்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளனர். உலகக் கோப்பை போட்டியிலும் இந்த வெற்றி தொடரவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. அது நிச்சயம் நிறைவேறும் என்றார் சச்சின்.
 thanks dinamani

No comments:

Post a Comment