Wednesday, November 17, 2010

அஸ்திரங்கள் வரும் போது முதல்வர் என்ன செய்வாரோ? ஜெ.,



"ராஜினாமா அஸ்திரத்திற்கே முதல்வர் கருணாநிதி இப்படி பதறுகிறார் என்றால், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்கு, கைது நடவடிக்கை என இன்னும் பல பெரிய அஸ்திரங்கள் எல்லாம் வரும் போது என்ன செய்வாரோ?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பதைப் பார்த்தால்,
"மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.கருணாநிதி தன் அறிக்கையில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோருவதன் மூலம் எதிர்கட்சியினருக்கு பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்றும் வினவி இருக்கிறார். இந்தக் கேள்வியில் இருந்து, ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது.எங்களைப் பொருத்தவரை ஸ்பெக்ட்ரம் வழக்கை அதிக அதிகாரம் கொண்ட மூத்த பார்லிமென்ட் எம்.பி.,க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் குழு தான் விசாரிக்க வேண்டும்.

பதவி விலகிய ராஜாவோ தன் மீது எந்தத் தவறும் இல்லை என கூறுகிறார். அப்படி இருக்கையில் கருணாநிதி ஏன் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை என்ற கோரிக்கையை கண்டு அஞ்சுகிறார்? அடுத்தபடியாக, என் அறிக்கையின் பயனாகத் தான் ராஜா, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என வெளியிடப்பட்ட செய்தியை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, என் அறிக்கைக்கு பொருளுமில்லை, பொருத்தமும் இல்லை என கூறி இருக்கிறார். கருணாநிதியின் இதுபோன்ற பதில், "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. "2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறைத் தலைவர் தன் இடைக்கால அறிக்கையில்,  ஒரு லட்சத்து  40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராஜா என குற்றம் சாட்டினார்.ராஜா இன்னமும் அமைச்சர் பதவியில் எப்படி தொடர்கிறார்? என, சுப்ரீம் கோர்ட் வெளிப்படையாக அண்மையில் தனது கருத்தை தெரிவித்தது. தனது இறுதி அறிக்கையில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆனால், இதற்கெல்லாம் ராஜாவோ அல்லது கருணாநிதியோ செவிசாய்க்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று நான்  பேட்டி அளித்த உடன், மூன்று நாட்களில் தன்னுடைய பதவியை ராஜா, ராஜினாமா செய்திருக்கிறார். இந்த அஸ்திரத்திற்கே கருணாநிதி இப்படி பதறுகிறார் என்றால், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் பின்னணியில் உள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்கு, கைது நடவடிக்கை என இன்னும் பல பெரிய அஸ்திரங்கள் எல்லாம் வரும் போது என்ன செய்வாரோ?இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். (dinamalar)

No comments:

Post a Comment