Monday, October 3, 2011

மக்கள் பிரச்னைகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி

 முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளிலே ஆக்கப்பூர்வமாக கவனத்தைச் செலுத்துவது அவருக்கும் நல்லது; மாநிலத்துக்கும் நல்லது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 நான்கு நாள்களாக ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு சீர் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்திருக்கிறார். அதிலிருந்தே நான்கு நாள்களாக மின்தட்டுப்பாடு உள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
 பதவியேற்ற மூன்றே மாதங்களில் மின் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்று கூறினார். ஆனால், இப்போது 2012 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டை அறவே நீக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் கூறியிருக்கிறார்.
 தி.மு.க. ஆட்சியில் இப்போது இருப்பதை விட குறைவான அளவே மின் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அதை அவர் கடுமையாக விமர்சித்தார். அப்போது அதை இருள் ஆட்சி என்று கூறினார். இப்போது நடைபெறும் ஆட்சிக்கு என்ன பெயர்? இது மட்டும் இருள் ஆட்சி இல்லையா?
 இப்படியொரு இக்கட்டான நிலைமை தனக்கு வரும் என்று எதிர்பார்க்காமல் தி.மு.க. ஆட்சியின்போது எதையெதையோ கூறினார். ஆனால், இன்று அவரை திருப்பிக் கேள்வி கேட்டு மிரள வைக்கிற அளவுக்கு பல பிரச்னைகள் உருவாகியுள்ளன.
 மின்சாரத்தில் மட்டுமல்ல; கூலி உயர்வு கேட்டு விசைத் தறியாளர்கள், தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 15 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.
 முதல்வர் ஜெயலலிதா தனது கவனத்தை ஆரோக்கியமற்ற பாதையிலிருந்து திருப்பி, மக்கள் பிரச்னைகளிலே ஆக்கப்பூர்வமாக கவனத்தைச் செலுத்துவதே அவருக்கும் நல்லது; மாநிலத்துக்கும் நல்லது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment