Monday, November 28, 2011

கனிமொழி, 4 பேருக்கு ஜாமீன்

 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
 கனிமொழி தவிர, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவன இயக்குநர்கள் ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
 எனினும் நடைமுறைத் தாமதத்தால் மேலும் ஒருநாள் அவர்கள் அனைவரும் சிறையில் இருக்க நேர்ந்திருக்கிறது.
 பிரித்துப் பார்க்க முடியாது: "உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் இந்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்' என்று இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கூறினார்.
 உச்ச நீதிமன்ற உத்தரவின் பயனைப் பெற இந்த 5 பேரும் தகுதியானவர்கள். கடந்தவாரம் ஜாமீன் வழங்கப்பட்ட 5 நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வித்தியாசம் காண முடியாது என்று தனது 39 பக்க உத்தரவில் நீதிபதி கூறியிருக்கிறார்.
 பெகுராவுக்கு ஜாமீன் மறுப்பு: தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுராவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
 "சிபிஐயின் ஆட்சேபங்கள் குறித்த பதில் மனு தாக்கல் செய்யலாம்' என்று பெகுரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அமான் லேகியிடம் நீதிபதி தெரிவித்தார்.
 அரசுத் தரப்பு வாதம்: முன்னதாக கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆதரவான கருத்துகளை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 பெகுரா தவிர மற்ற 5 பேருக்கும் ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது. இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் வேறு 5 பேருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. அதே நிலையில் வைத்து இந்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கலாம் என்று பராசரண் கூறினார்.
 பெகுராவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு பராசரணும் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் அனைவரும் பொதுச் சொத்துகளின் காவலர்கள் என்பதால் அவர்களது ஜாமீன் மனுக்கள் மீது கடுமையான விசாரணை அவசியம் என்று அவர் வாதிட்டார்.
 கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருந்தனர். இந்த மனுக்கள் மீது டிசம்பர் 1-ம் தேதிதான் விசாரணை நடப்பதாக இருந்தது.
 இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யூனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கெüதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
 பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
 இந்தத் தீர்ப்பு வெளியான உடனேயே, "தங்களது மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும்' என்று கோரி கனிமொழி உள்ளிட்ட 6 பேரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இப்போது பெகுரா தவிர மற்ற 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
 இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கும் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, இதுவரை ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடவில்லை. ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சண்டோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 கனிமொழி உள்ளிட்டோர் கடந்த மே 20-ம் தேதி முதல் சிறையில் உள்ளனர்.
 இன்று விடுதலை: உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்ட நிலையிலும், அந்த ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு உரிய நேரத்தில் வந்தடையாததால் கனிமொழி உள்ளிட்ட 5 பேரும் மேலும் ஒருநாள் இரவு திகார் சிறையிலேயே தங்க நேர்ந்திருக்கிறது.
 உயர் நீதிமன்ற உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்களை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடம் சமர்ப்பித்து, விடுதலை உத்தரவைப் பெற வேண்டும். ஆனால், நீதிமன்ற அலுவல் நேரமான மாலை 5 மணிவரை அந்த உத்தரவு நீதிபதி முன் தாக்கல் செய்யப்படவில்லை.
 வழக்குரைஞர்களின் வேண்டுகோளை ஏற்று மாலை 5.15 வரை நீதிபதி காத்திருந்தார். அப்போதும் ஆவணங்கள் வந்து சேராததால் அவர் புறப்பட்டுச் சென்றார்.
 உயர் நீதிமன்ற உத்தரவு நகல்கள் செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கனிமொழியின் வழக்குரைஞர் ஆர். சண்முக சுந்தரம் தெரிவித்தார். அதன் பிறகு திகார் சிறையிலிருந்து கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தாமதமாக அறிந்த ராஜாத்தியம்மாள்: கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் கடந்த சில தினங்களாக தில்லியில் இருந்தார். திங்கள்கிழமை மதியம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த தகவல், சென்னை சென்றடைந்த பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது.

 கனிமொழி மகிழ்ச்சி
 தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த தகவல், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த கனிமொழிக்குத் தெரிவிக்கப்பட்டது.
 இதைக் கேட்ட அவர் பூரிப்பு அடைந்தார். அவருக்கு அருகில் இருந்த அவரது கணவர் அரவிந்தன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கட்சித் தொண்டர்கள் சிலர், வழக்குரைஞர்கள் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 அப்போது கனிமொழியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிமொழியுடன் பேசினார். அதன் பின்னர் நீதிமன்றத்தின் அலுவல் நேரம் முடிவடைந்ததால் அவர் பாட்டியாலா நீதிமன்ற சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரைக் காண டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அவர்களைக் காண கனிமொழி சிறிது நேரம் வெளியே வந்து வாழ்த்துகளைப் பெற்று மீண்டும் உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்து திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.thanks dinamani

No comments:

Post a Comment