Saturday, August 25, 2012

இதயத்தை பாதுகாக்கும் இதமான ஆலோசனை!


இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய முடிவதில்லை. இதமாய் ஒரே லயத்தோடு துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்புதான் மாரடைப்பு என்று அறியமுடிகிறது. இந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இதயத்தின் நலனை காக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.
மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் சிபிஆர்
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். சிபிஆர் பயிற்சி பெற்றிருந்தால் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சரியான முதலுதவி அளித்து அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும். எனவே உடனடியாக உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளிலோ, பயிற்சி நிலையங்களிலோ சிபிஆர் பயிற்சி பெற்றுக்கொள்வதன் மூலம் நம் அன்பிற்குரியவர்களை பாதுகாக்கலாம்.
மதுவுக்கு குட்பை
தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் எளிதில் தாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதிகம் மது அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதனால் இதயநோய், அல்லது பக்கவாதம் நோய் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். மது அருந்துபவர்களுக்கு உடல்பருமன் ஏற்படுகிறது. இதுவே இதயநோய்க்கும் காரணமாகிறது. எனவே மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தினால் இதயநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
நல்லா நடங்க
இதயநோய் ஏற்படாமல் தடுக்க எளிமையான காசு செலவில்லாத சிகிச்சை எது எனில் நடப்பதுதான். காலையிலும், மாலையிலும் அரைமணிநேரம் காலார நடங்கள். இதனால் இதய நோய் மட்டுமல்லாது உடல்பருமன், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காலையில் வாங்கிங் போவது மனதிற்கு உற்சாகத்தை தரும். நடைபயிற்சியைப் போல நீச்சலும் சிறந்த பயிற்சிதான் இதனால் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் அறிவுரை.
கெட்ட கொழுப்புள்ள உணவு
ட்ரான்ஸ்பேட் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளில் ட்ரான்ஸ்பேட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்த கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் இதயநோய், டைப் 2 நீரிழிவு, பக்கவாதநோய் ஏற்படுகிறது. எனவே டின்களில் அடைத்த உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்ப்பதன் மூலம் இதயநோயை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment