Tuesday, November 27, 2012

கங்னம் ஸ்டைல் டான்ஸ்


கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2' இறுதிப்போட்டியில் சிறப்பு நடுவராக பங்கேற்ற விழா நாயகன் பிரபுதேவா கங்னம் ஸ்டைல் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா பட்டத்துடன் நடனப்புயல் பிரபுதேவாவின் கையால் 40 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார் கார்த்திக்.
விஜய் டிவியில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2 நிகழ்ச்சி நவம்பர் 11ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. கோவை இந்துஸ்தான் கல்லூரியில் ஆயிரக்கணக்காக ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று (நவம்பர் 25) விஜய் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.
இறுதிப்போட்டியில் கார்த்திக், ஜாபர், விஜய்வர்மா, சந்த்ரு, ஜெயந்த் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுக்களிலும் ஒவ்வொரு போட்டியாளரும் புதிது புதிதான தீம்களில் ஆடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நடுவர்களாக வந்திருந்த ஸ்ரீதர், காயத்ரி ரகுராம், அசோக்ராஜா ஆகியோர் கங்னம் ஸ்டைல் நடனம் ஆடி நடனப்போட்டியை களை கட்டச் செய்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு நடுவராக இறுதிப்போட்டிக்கு நடிகர் பரத் வந்திருந்து போட்டியாளர்களையும், ரசிகைகளையும் உற்சாகப்படுத்தினார்.
சீசன் 1 நிகழ்ச்சியில் பிரபுதேவா பட்டம் வென்ற ஷெரீப் நடனமாடியதோடு மட்டுமல்லாது போட்டியாளர்களுக்கு பரிசு வெல்வதற்கான ஆலோசனைகளை கூறினார்.கடல் படத்தின் ‘நெஞ்சுக்குள்ளே' பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகை பூர்ணா.
இந்த நிகழ்ச்சியின் நாயகன் இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா தனது இரண்டு மகன்களுடன் பங்கேற்றார். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் "கோ கோ கோவிந்தா"... பாடலுக்கும் "கங்னம் ஸ்டைல்" பாடலுக்கும் நடனமாடினார். எனக்கு கோவை ரொம்ப பிடிக்கும் இங்கு சூட்டிங்கிற்கு வரும்போது சாலையோரங்களில் இட்லி சாப்பிடுவேன் ரொம்ப டேஸ்ட்டி என்று கூறி கோவை மக்களுக்கு ஐஸ் வைத்தார்.
உடம்பெல்லாம் சாம்பல் பூசி அகோரி ஸ்டைல் நடனமாடிய கார்த்திக் ப்ரீ ஸ்டைல் சுற்றில் சர்வதேசத் தரத்திலான நடனத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்களை மட்டுமல்லாது நடனப்புயலையும் கவர்ந்த கார்த்திக், பிரபுதேவாவின் கையால் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா பட்டம் வென்றதோடு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்றார். சந்த்ரு இரண்டாம் இடத்தை பிடித்து ரூ10 லட்சத்திற்கான காசோலையை பரிசாகப் பெற்றார். ஜாபருக்கு இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பெற்றார்.

1 comment: