Monday, November 1, 2010

ஆ.ராசா பதவியில் நீடிப்பது சரியா? ஜெயலலிதா




      ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ஆ.ராசா, பதவியில் நீடிப்பது சரியா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
 இப்பிரச்னையில் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுகிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 மத்திய அமைச்சர் ஆ. ராசா இன்னமும் எப்படி பதவியில் தொடர்கிறார் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. இதன் பிறகும், ராசா தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
 பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் கடைப்பிடிக்கத் தவறிய ராசா, பொறுப்பு வாய்ந்த, அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.
 2008-ம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்த போதே தன்னுடைய பதவியை ராசா ராஜிநாமா செய்து இருக்க வேண்டும்.
 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியான 1.10.2007 என்பதை 25.9.2007 என்று முன்தேதியிட்டு மாற்றி அமைக்கப்பட்டது.
 இதை எதிர்த்து, எஸ் டெல் நிறுவனம் தொடுத்த வழக்கில், விளையாட்டு தொடங்கிய பிறகு விதிகளை மாற்றுவதைப் போல் உள்ளது என்று தெரிவித்து, இந்த மாற்றம்
 சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்று 2009 ஜூனில் தில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போதாவது ராசா தனது பதவியை ராஜிநாமா செய்து இருக்க வேண்டும்.
 தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொலைத்தொடர்புத் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று தெரிவித்தது.
 பிரதமரை தவறுதலாக மேற்கோள்காட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து,
 மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியின் ஆணையை 2009 டிசம்பரில் உறுதி செய்தது.
 அப்போதும் ராஜிநாமா செய்யாத ஆ. ராசா, தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொலைத்தொடர்புத் துறை மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைத்தார் ராசா.
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை செய்த பின்னர், அதில் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் அப்பட்டமாகவே நிகழ்த்தப்பட்டுள்ளன என்று 2009 மே மாதம் மத்திய கண்காணிப்பு ஆணையர் தனது முதல் நிலை விசாரணை அறிக்கையில் தெரிவித்த போதாவது, ராசா ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.
 மத்திய அமைச்சர் ராசாவுக்கும், கம்பெனிகளின் தரகர் நிரா ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
 ராசாவுக்கும், மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு, மத்திய அமைச்சர் பதவியில் தான் தொடர்வதை உறுதி செய்ய இந்தத் தொடர்புகளை ராசா எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதை வெளிப்படுத்திய இந்த உரையாடல் ஒளிபரப்பான போதாவது ராசா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்து இருக்க வேண்டும்.
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளில் ராசாவின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் இருப்பதையும், இதன் விளைவாக சட்ட விரோதமான செயல்களின் மூலம் ஒன்பது நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று இருப்பதையும் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் சுட்டிக்காட்டினார். அப்போதாவது ராசா ராஜிநாமா செய்து இருக்க வேண்டும்.
 மாறாக, நான் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார் ராசா.
 இந்திய நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா உடந்தையாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. மத்திய கண்காணிப்பு ஆணையர் முதல் உச்ச நீதிமன்றம் வரை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்ட ஒவ்வொரு அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளன.
 எனினும், ராசாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து திரும்பப் பெற முதல்வர் கருணாநிதிக்கு மனம் வரவில்லை. அமைச்சர் ஆ.ராசா குறித்த பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு, அவர் ஜனநாயகத்தை அவமதிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
thanks dinamani 

No comments:

Post a Comment