Tuesday, January 4, 2011

இளங்கோவன் தனிக்கட்சி துவக்க வேண்டும் : பா.ஜ., தலைவர் அட்வைஸ்

 ""காங்., கட்சியிலிருந்து இளங்கோவன் விலகி, தனிக்கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், உடுமலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. இது ஒரு கூட்டுக்கொள்ளை என்பதால் தான் நடவடிக்கை எடுக்காமல், சி.பி.ஐ., ரெய்டு என கண்துடைப்பு நாடகத்தை நடத்தி, காங்., அரசு மக்களை ஏமாற்றுகிறது.முதல்வர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "ஏழைகள் இருக்கும் வரை இலவசம் கொடுக்கப்படும்' என்றார். ஏழ்மை இல்லாத நிலைமை உருவாக வேண்டுமென்றால், தமிழகத்தில் தி.மு.க., அரசு முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஏழைகள் கையேந்தும் நிலை என்றும் நீடிக்கும்.

காங்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, 1977ல் ஒன்று திரண்டது போன்று, தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக திரள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதே நேரத்தில், பா.ஜ., தன் சொந்த பலத்தில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது, கட்டாயமாக அனைத்து ஜாதி மக்களையும் கொண்ட அறவோர் குழு அமைத்து, கோவில்கள் பாதுகாக்கப்படும். இளங்கோவன் தற்போது, "தி.மு.க., - காங்., கூட்டணி விரும்பத்தகாத கூட்டணி' என, பேசி வருகிறார். தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்., விலகவில்லை எனில், மூப்பனார் போன்று, இளங்கோவன், தனியாக கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புகிறேன்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment