Tuesday, March 29, 2011

நானும் ரோஷக்காரன்தான்: விஜயகாந்த்

 "நானும் ரோஷக்காரன்தான்' என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தாக்கிப் பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகனுக்கு ஆதரவாகவும், தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கர், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் பி. பழனியப்பன், பென்னாகரம் வேட்பாளர் ந. நஞ்சப்பன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தும் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது:
சமூக நீதி காக்க பாளையங்கோட்டை சிறையைத் தவிர அனைத்துச் சிறைகளுக்கும் சென்றிருப்பதாகவும், விஜயகாந்த் எந்த சிறைக்கு சென்றார் என்றும் பாமக தலைவர் கேட்கிறார். எனது பெயரை அவர் குறிப்பிட மாட்டார், என்று சொல்லும்போது, நானும் குறிப்பிட மாட்டேன். நானும் ரோஷக்காரன் தான்.
எந்த சமூக நீதியைக் காக்க சிறை சென்றார் அவர். பேருந்துகளை உடைத்தும், குடிசைகளை எரித்தும், மரங்களை வெட்டியும் சிறைக்குச் சென்றிருக்கலாம்.
இரு சமூகத்தினரிடையே சாதி தீயை வளர்த்து அதில் குளிர்காய நினைக்கிறார்கள். ஆனால், கலவரத்துக்கு காரணமானவர்களை அந்தத் தீயே எரித்துவிடும். இரு சமூகத்தினருக்கு இடையே சாதி மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் நடத்துகிறது பாமக.
இந்த மோதலில் சிறைக்குச் சென்றவர்களுக்கு எந்தவித உதவியும் அளிக்கவில்லை. இதுவரை, வழக்கு விசாரணைக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுதான் சமூக நீதிக்காக சிறைக்கு சென்ற லட்சணமா?
டாஸ்மாக் கடைகளை தங்களது மகளிரணியை வைத்து மூடுவதாக அறிவித்தார். இப்போது, தேர்தலுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து பேசலாம் என்கிறார். பாமக எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.
கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக செயற்குழு, பொதுக் குழுவை கூட்டி பெட்டிகள் வைத்து கட்சியினரிடம் வாக்குக் கேட்டு முடிவு செய்தார்கள். இப்போது, திமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தப் பெட்டி வைத்து முடிவு செய்தனர்?
எனது உருவ பொம்மையை பாமகவினர் எரிப்பதால், நெருப்பு வைத்து என்னை மிரட்ட முயற்சிக்கின்றனர். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். தேமுதிக தொண்டர்களாலும் இத்தகைய செயல்களில் ஈடுபட முடியும். அந்த வழியில் தொண்டர்களை நான் ஈடுபடுத்தமாட்டேன்.
மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றிருந்தபோது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலோ, கல்லூரிகளிலோ மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலோ பாமக தங்களது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை?
ஆனால், நான் சொந்தப் பணத்தில் ஏழை, எளியோருக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். 25 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கி வருகிறேன். இலவச கம்ப்யூட்டர் மையங்களை மாவட்டந்தோறும் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கலப்புத் திருமணங்களையும், இலவசத் திருமணங்களையும் நடத்தி வருகிறேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்.
எனது, கல்வி நிறுவனத்துக்கு அருகே ஏழைகளுக்காக ரூ.40 லட்சத்தில் திருமண மஹால் கட்டியுள்ளேன் என்றார் விஜயகாந்த்.

No comments:

Post a Comment