Saturday, November 6, 2010

கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம்: இளங்கோவன்



சென்னை, நவ. 6: மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் காரணத்தால், சில புகார்களுக்கு காங்கிரஸ் கட்சி "சப்பைக்கட்டு' கட்டும் நிலை உருவாகி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள கட்சிகளில் தி.மு.க.வும் சேர்ந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.
ஆட்சியில் பங்கேற்றுள்ள காரணத்தால், காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை தருகிறது. பெட்ரோல் விலை உயர்வு போன்ற கொள்கை முடிவுகளில் தி.மு.க.வையும் கலந்து பேசித்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவால் பெரும்பான்மை பெறும் நிலை தமிழகத்தில் இருந்தாலும், தி.மு.க. அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகளின் போதுகூட காங்கிரஸ் தலைவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை.
உதாரணமாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது பற்றி காங்கிரûஸ கலந்து ஆலோசிக்கவில்லை.
மத்தியில் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காகத்தான், சில குறிப்பிட்ட புகார்கள் வந்தபோதிலும், நாங்கள் "சப்பைக்கட்டு" கட்டும் நிலை இருக்கிறது.
கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காங்கிரஸ் தொண்டர்கள் பிரதிபலிக்கும் போது சங்கடங்கள் உருவாகின்றன.
இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துவத்தை இழந்து வருவது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா திருச்சியில் பேசியபோதும் இதே கருத்தை வலியுறுத்தினார். தனித்தன்மையை வளர்த்து முதன்மையான கட்சியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தைப் பொருத்தவரை தனித்து தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். 1967-ல் தி.மு.க. வென்றபோதுகூட, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் தி.மு.க. தலைமையில் கூட்டு சேர்ந்துதான் போட்டியிட்டன.
எனவே ஒருமித்த கருத்து இருப்போர், மக்களுக்கு நம்பிக்கை உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்ல இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
இதுபற்றி மேலும் விரிவாகக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் இதுபோன்ற நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைப்படத் துறையைப் போல அரசியலிலும் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என அவரது பிறந்தநாளில் வாழ்த்தி கேக் ஊட்டினேன். அதனால் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. நமது கட்சியில் இல்லை என்பதற்காக விஜயகாந்தை நாம் உதாசீனம் செய்யக் கூடாது.
தனக்கு உள்ள பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் இருப்பது சாதாரண விஷயமில்லை. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"சில புகார்களுக்கு காங்கிரஸ் சப்பைக்கட்டு கட்டும் நிலை உருவாவதாக' கூறியது பற்றி இளங்கோவனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, அது யார் மீதான புகார்கள் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதானே என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, பதில் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.


No comments:

Post a Comment