Sunday, December 18, 2011

சச்சினை வீழ்த்துமா சாப்பல் திட்டம்: கங்குலி விளக்கம்

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர், 31 டெஸ்டில் 11 சதங்கள்
உட்பட 3,151 ரன்கள்(சராசரி 60.59 ) எடுத்துள்ளார். இவரை எப்படி சமாளிப்பது என ஆஸ்திரேலிய பவுலர்கள் பயந்து போயுள்ளனர். 
அதிரடி திட்டம்:
இவர்களது அச்சத்தை போக்க, கிரெக் சாப்பலை பயன்படுத்த ஆஸ்திரேலிய பயிறசியாளர் மிக்கி ஆர்தர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்திய பயிற்சியாளராக இருந்த சாப்பல் அனுபவ வீரர்களான சச்சின், சேவக், டிராவிட் போன்றவர்களின் பலம், பலவீனம் அறிந்தவர். முதல் டெஸ்ட் போட்டி(டிச., 26-30) துவங்கும் முன்பு இவர், சக ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார். அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்ட முறை பற்றி எடுத்துக் கூறுவார் என தெரிகிறது. இதன் மூலம் சச்சின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடலாம் என ஆஸ்திரேலியா எண்ணுகிறது. 
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கங்குலி உட்பட மற்ற வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தவர் சாப்பல். இந்நிலையில் இவரது தற்போதைய திட்டம் எடுபடாது என முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். 
இது குறித்து கங்குலி கூறியது:
கடந்த 2008ல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என பரிதாபமாக இழந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகிகளில் ஒருவராக கிரெக் சாப்பலும் இருந்தார். எனவே, இவரது உதவி ஆஸ்திரேலிய அணிக்கு இம்முறையும் பயன் அளிக்காது. இவரது திட்டமும் எடுபடாது.
துணிச்சல் இல்லை:
இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள்(2005-07) சாப்பல் இருந்தார். இவரை பயிற்சியாளராக தேர்வு செய்தது எனது தவறு தான். தனிப்பட்ட முறையில் வீரர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டார். சச்சின், லட்சுமண், ஜாகிர், ஹர்பஜன் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரானரவாக இருந்தார். அணியின் எதிர்காலம் தொடர்பாக எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் அவரிடம் காணப்படவில்லை. தொடர்ந்து தவறு மேல் தவறு செய்தார். ஆனாலும், அப்போதைய கேப்டன் டிராவிட்டுக்கு அவரது தவறை தடுத்து நிறுத்தும் துணிச்சல் இல்லை.
 இவ்வாறு கங்குலி கூறினார்.(dinamalar)

No comments:

Post a Comment